ஒரே நாளில் 416 இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு.

naveen

Moderator



திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா மாணவர்கள் 416 பேர் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முயற்சியால் நேற்று ஒரே நாளில் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.



திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். இந்நிலையில், பள்ளியில் இருந்து இடையில் நின்றுபோன மாணவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகம் உள்ளனர் என்ற தகவல் ஆட்சியரின் கவனத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரியவந்தது.



இதையடுத்து, திருப்பத்தூர் வட்டத்துக்கு உட்பட்ட 6 மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற ஆட்சியர் பள்ளியில் இருந்து இடையில் நின்ற மாணவ, மாணவிகளை அழைத்து பேசி, அவர்களது பெற்றோரிடம் பேசி மீண்டும் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து கல்வி கற்க செய்தார். இதேபோல, மாவட்டம் முழுவதும் நிறைய மாணவர்கள் உள்ளனர் என்பதை அறிந்த ஆட்சியர் பள்ளியில் இருந்து பாதியில் நின்ற மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க பள்ளி கல்வித்துறைக்கு உத்தர விட்டார்.



அதன்படி, 1,898 பேர் இடை நின்ற மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அனை வரையும் மீண்டும் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து படிக்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன்படி, முதற்கட்டமாக இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர முயற்சியை ஆட்சியர் எடுத்தார்.



நாட்றாம்பள்ளி வட்டம் தாசிரி யப்பனூர் அரசு மேல்நிலைப்பள்ளி யில் தான் அதிகளவிலான இடை நின்ற மாணவர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி கல்வித் துறை அலுவலர்கள், வருவாய்த் துறையினருடன் தாசரியப்பனூர் கிராமத்துக்கு சென்ற ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து இடைநின்ற 23 மாணவர்களின் வீட்டின் முகவரியை கேட்டறிந்து நேரடியாக மாணவர்களின் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.



பிறகு, மாணவ, மாணவிகளை ஒவ்வொருவராக தேடிச்சென்று கல்வியின் முக்கியத்துவம், கல்வி யால் மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு மேம்படும் என்பதை பெற்றோரிடம் விளக்கி கூறி மாணவர்களை தனது காரிலேயே பள்ளிக்கு அழைத்து வந்தார். இதே போல் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்ற ஆட்சியர் அங்கு பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்களை தேடிச் சென்று அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்தார்.



அதன்படி, காலை முதல் மாலை வரை 416 இடைநின்ற மாணவர்களை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஒரே நாளில் பள்ளியில் சேர்த்தார். ஆட்சியரின் இத்தகைய செயலுக்கு பொது மக்கள் மற்றும் பெற்றோர் பாராட்டு களையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.



இது குறித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறும்போது, ‘‘பள்ளி யில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதே நமது நோக்கமாக இருந்தது. அரசுப் பள்ளியில் படிப்பதை நாம் பெருமையாக நினைக்க வேண்டும். குழந்தைகளை படிக்க வைப்பது பெற்றோரின் கடமையாகும். பொருளாதார சூழ்நிலை இருந்தால் அதை எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

அதை தவிர்த்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத் தினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, குழந்தை திரு மணத்தை அனுமதித்தால் கட்டாயம் வழக்குப்பதிவு செய்யப்படும். இன்று (நேற்று) எடுக்கப்பட்ட முயற்சியில் 416 மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பட்டுள்ளனர். எஞ்சி உள்ள மாணவர்கள் விரைவில் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.